Pages

Friday 19 May 2023

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்ட மசோதா 2023-கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற திமுக அரசு..

 




கடந்த 21.04.2023 அன்று எட்டு மணி நேர வேலை நேரத்தை பனிரெண்டு மணி நேரமாக உயர்த்துகிற 2023 தொழிற்சாலைகள் சட்டத் திருத்த தீர்மானத்தை கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி திமுக அரசு சட்டமன்றதில் நிறைவேற்றியது.இம்முடிவிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சிகள்,கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்தும் கடும் கண்டனங்கள் மற்றும் போராட்ட அறிவிப்புகள் எழுந்ததை  அடுத்து தற்காலிகமாக இந்த தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக திமுக அரசு அறிவித்தது.தொழிலாளர் நலனை பறிக்கிற,தொழிலாளர் உழைப்புச் சுரண்டலை சட்டப்பூர்வமாக்குகிற கருப்பு சட்டமானது நிறுத்தி வைக்கப்பட்டதும் திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி வழங்குகிற மதுபானச் சட்டத் திருத்தம்  பின்வாங்கப்பட்டதும் தற்காலிக வெற்றியாக ஒரு புறம் பேசப்பட்டாலும் அதே  நாளில் தமிழக நீர்வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிற  நில ஒருங்கிணைப்பு சட்டமொன்றை திமுக அரசு நிறைவேற்றியது அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனதுதான் வேதனை.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட மசோதா:

பெரும் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துகிற முறைகளில் ஏற்படுகிற கால தாமதங்களை தவிர்க்கும் வகையில் நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல எவ்வாறு தொழிற்சாலை திருத்த சட்டம் மற்றும் மதுபானச் சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலமாக திமுக அரசு நிறைவேற்றியதோ அதேபோலத்தான் நில ஒருங்கினைப்புச் சட்டமும் எந்தவிதம் விவாதமும் இல்லாமல் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள், தற்போது நடைமுறையின்படி அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், ஒப்படைப்பு, குத்தகை முறைகள் போன்றவற்றை இரு நூற்றாண்டு காலமாக பல்வேறு கட்ட நிர்வாக  ஆணைகள் மற்றும் தீர்ப்புகள் மூலமாக  உருவாக்கப் பெற்றவையாக உள்ளன.நிலமானது உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆகவே பல்வேறு தீர்ப்புகள் நிர்வாக ஆணைகள்,உள்ளாட்சி சட்ட நடைமுறைகளால் நிலத்தை கையகப்படுத்துவதற்கு பெரும்  நேர விரையமும் பண விரையமும்  ஏற்படுகிறது எனக் கூறுகிறார்.இதை ஒழுங்குபடுத்துவதற்கும் பெரும் திட்டங்களுக்கு விரைவாக நிலத்தை கையகப்பபடுத்துவதற்கும் இந்த சட்டம் வகை செய்கிறது என்கிறார்.அதாவது இந்த சட்டத்தின்படி  100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம்.ஒருவேளை இந்த நூறு ஏக்கருக்குள் நீர்நிலைகள் இருந்தால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உத்தரவாதம் கொடுத்துவிட்டு நிலத்தை பயன்படுத்திக் கொள்ளாலாம் என்பதே சட்டத்தின் சாரம்.

நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகள்:

முதலில் இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டமானது நடைமுறையில் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பு சட்டத்தையும் நில கையகப்படுத்தும் சட்டத்தையும் செல்லாதவையாக்கிவிடும்.உதாரணமாக, தற்போது நடைமுறையில் சுடுகாடு,நீர்நிலைகள்,மேய்ச்சல் நிலம் மற்றும் தடையானைச் சட்டம்(தோப்பு உள்ளிட்டவை) போன்றவை நிலங்களின் எல்லைகளுக்குள் வந்தால்,அதற்கு வருவாய்த் துறையின் பல்வேறு அனுமதியை பெற வேண்டும்.ஒரு ஏக்கர் மேய்ச்சல் நிலம் கையப்படுத்தப்பட்டால் அதற்கு ஈடு செய்யும் வகையில் இரண்டு ஏக்கர் மேய்ச்சல் நிலம் வழங்க வேண்டும் போன்ற நடைமுறைகள் உள்ளன.

தற்போதைய சட்டமானது, மேற்கூறிய சட்டங்களை வெற்று காகிதமாக்கி விடும்.உதாரணமாக,ஒரு தனியார் நிறுவனம் நூறு ஏக்கருக்கு ஒரு திட்டத்தை முன்மொழிவதாக வைத்துக் கொள்வோம்.தற்போது அரசு அறிவித்துள்ள பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தையே எடுத்துக் கொள்வோம்.திட்டம் வருகிற பகுதிகளில்  விளை நிலங்களும்,பாசனத்திற்கோ குடிநீருக்கோ பயன்படும் நீர்நிலைகளும் இந்நிலத்திற்குள் வந்தால்.இந்த “சிறப்பு” சட்டத்தின்படி இத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கவேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு(water storage) குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதி கூறினால் போதும்.இவ்வாறு உறுதி கூறப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அனுப்புவார்.அரசு நிபுணர் குழுவிற்கு அனுப்பும்.நிபுணர் குழு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும்.அரசின் ஆதரவு நிபுணர் குழுக்குள் பெரும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களுக்கு  ஏற்றவாறு ஒப்புதல் வழங்கும் என்பது இங்கே விளக்கத் தேவையில்லை.

இங்கு கொடுமை என்னவென்றால் நீர்நிலைகளை சுற்றி மரங்களை அகற்றி  கான்க்ரீட் கட்டுமானங்களை எழுப்பிவிட்டால் நீர் நிலைகளை எவ்வாறு காப்பாற்ற முடியும்? என சிந்திக்காததே.நீர்நிலைகள் நிலத்தோடு பிணைந்த ஒரு சூழல் அமைவு.அந்த அமைவின் கண்ணிகளை அகற்றி விட்டால் இறுதியில் நீர்நிலைகள் தானகவே அழிந்துவிடும்.

முழுவதும் வணிக நோக்கில்,கார்பரேட் முதலாளிகளுக்கு கஷ்டமில்லாமல் நிலத்தையும் நீர்நிலைகளையும் வாரிக் கொடுப்பதற்கே இந்த சட்டத்தை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

இது ஏதோ சுற்றுசூழல்வாதிகள் மட்டுமே எதிர்க்கவேண்டிய, பேச வேண்டிய விஷயமில்லை என்பதை நாமிங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.காலநிலை மாற்ற நெருக்கடியால் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகிற நிலையில் கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற கதையாக,இருக்கின்ற சூழல் வளங்களை அழித்துவிட்டு எந்த நீரை குடிக்க போகிறோம்? எந்த காற்றை சுவாசிக்கபோகிறோம்? எந்த நிலத்தில் வசிக்கப் போகிறோம்? என்பதை சிந்திக்கவேண்டும்.



கடந்த கால படிப்பினைகளை புறந்தள்ளுகிற அரசு:

கடந்த காலத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் இருந்துமே தமிழகமெங்கும் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரமே  நீர்நிலைகளை கொலை செய்து உருவாக்கப்பட்டது  என்பதுதான் வேதனையான உண்மை.தற்போது சென்னையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் ஏரிகள் மீதும் வாய்க்கால்கள் மீதுதான் கட்டப்பட்டுள்ளன.ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் பெயர் போன தமிழகத்தில் காசு கொடுத்தால் அனுமதி கிடைத்துவிடும் என்பது பச்சிளம் குழந்தைகளும் அறியும்.இவ்வாறு பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்கி நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்பட்ட நகரமானது அதனது பின்விளைவுகளை எதிர்கொள்ளாமல் இல்லை.

நியூட்டனின் மூன்றாம் விதியை நாமிங்கு சூழலுக்கும் பொருத்தலாம்.நாம் சூழல் அமைவை அழித்தால்,மீண்டும் இயற்கையிடமிருந்து எதிர்விளைவு வரும்  என்பதை சென்னையை சூழ்ந்த 2015 பெருவெள்ளமே மிகப்பெரும் சாட்சி.மாநகரின் நீர்நிலை ஆக்கிரமிப்புகளே மழை வெள்ளத்திற்கு போக்கிடம் இல்லாமல் சாலைகளையும் விமான நிலையங்களை,ரயில்நிலையங்களையும் குடியிருப்புகளையும் சூழ்ந்தன.

தற்போது கொண்டுவந்துள்ள நீர்நிலை கொலைச் சட்டத்தை பார்க்கும்போது,கடந்த காலத்திலிருந்து ஆளும் கட்சி எந்த படிப்பினையும் பெற்றதாக தெரியவில்லை.ஆகவே நடைமுறையில் சட்டங்கள் இருக்கும் போதே இந்த நிலைமை என்றால் தற்போது இந்த சட்டம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிக்கிற சட்டம்,நில ஒருங்கிணைப்பு சட்டம் ஆகியவற்றை திமுக அரசு அவசரம் அவசரமாக கொண்டு வருவதைக் பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வது போல ஒரு மாயை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.ஆளுநர் எதிர்ப்பும் பாஜக எதிர்ப்பு மட்டுமே திராவிட மாடல் அரசா?அல்லது தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் நமது நீர்நிலை வளங்களையும் “முதலீட்டாளர்கள் நலன்” என்ற பெயரில் கார்பரேட்களுக்கு தாரை வார்ப்பதும் திராவிட மாடல் அரசா என்பது திமுக அரசிற்கே வெளிச்சம்!

நன்றி ஜனசக்தி 

No comments:

Post a Comment