Pages

Tuesday 25 July 2023

ஜான் பெல்லமி பாஸ்டரின் மார்க்சிய சூழலியல் விவாதங்கள்

 


ஜான் பெல்லமி பாஸ்டர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதலாக மன்திலி ரிவியூவின் ஆசிரியராக உள்ளார்.தொழில்முறையில் ஒரீகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.சமகால சூழலியல் சிக்கல்களை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுகிற இவரது பகுப்பாய்வு முறையால் தனிக்கவனம் பெற்று வருகிறார்.

பெல்லமி பாஸ்டர் 2000 த்தின் தொடக்கத்திலிருந்து சூழலியல் குறித்த மார்க்சிய விவாதத்தை பல்வேறு நூல்களின் வழியே எழுதியும் பேசியும் வருகிறார்.அவை முறையே Marx’s Ecology (2000),Ecology Against Capitalism(2002), Ecological Imperialism(2006), Marx’s Grundrisse and the Ecological Contradictions of Capitalism(2008), The Ecological Revolution(2009) ,The Ecological Rift(2010), What Every Environmentalist Needs to Know About Capitalism(2011), Marx and the Earth: An Anti-Critique(2016) ,The Return of Nature: Socialism and Ecology(2019) The Robbery of Nature: Capitalism and the Ecological Rift(2019)

இவரது ஆங்கில நூலின் முதல் தமிழாக்க நூலானது 2011 ஆம் ஆண்டில் சூழலியல் புரட்சி(தமிழில் தோழர் துரை மடங்கன்,விடியல் பதிப்பகம்) என்ற தலைப்பிலும்  இரண்டாம் நூல் 2012 ஆம் ஆண்டில் “மார்க்சும் சூழலும்”(தமிழில் தோழர் மு வசந்தகுமார்,விடியல் பதிப்பகம்) என்ற தலைப்பிலும் வெளிவந்தது.

பெல்லமி பாஸ்டரின் ஆய்வும் சமகால அரசியல் விவாதங்களும்:

தமிழக அளவிலான சூழலியல் அரசியல் விவாதங்களில் பெல்லமி பாஸ்டர் நூல்கள் முதலில் அதிகம் அறியப்படாமல் இருந்தாலும் பின்னாட்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எனலாம்.சூழலியல் சிக்கல்கள் குறித்து மார்க்சிய விமர்சனங்களுக்கு  பெல்லமி பாஸ்ட்டரின் நூல்கள் பெரிதும் பங்காற்றியது.குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் சூழலியலாளர்கள் மத்தியில் நிலவிய பல்வேறு தாராளவாத கண்ணோட்டங்களை பெல்லமி பாஸ்ட்டரின் நூல்கள் மறு வரையறை செய்யத் தூண்டியது என்றே கூறலாம்.

மார்க்சியமானது தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் குறித்துதான் அக்கறை கொண்டுள்ளது எனவும் சூழலியல் சிக்கல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.அதாவது மார்க்சிடம் பிரோமிதியேன் வாதமே  செல்வாக்கு செலுத்தியதாக விமர்சிக்கப்பட்டார்.போலவே சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிற தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு இடதுசாரிகள் ஆதரவாக இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் மட்டுமே இடதுசாரிகள்  அக்கறைப்பட்டார்கள் எனக் கூறப்பட்டது.

சூழலியலாளர்கள் மத்தியிலோ சூழலியல் சிக்கல்களுக்கு தனி நபர்களின் ஒழுக்க மீறல்கள்தான்  காரணம் என்றும்,சட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் இருப்பதுதான் காரணம் என்றும்,மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம் என்றும் முன்வைக்கப்பட்டன.இதற்கு தீர்வாக இந்த முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இத்தகைய பின்புலத்தில்தான் சூழலியல் குறித்த மார்க்சிய தத்துவார்த்த விளக்கங்களை பாஸ்டரின் நூல்கள் முன்வைக்கத் தொடங்கின.சூழலியல் கரிசனம் மிகுந்த மார்க்சிய எழுத்தக்களை கொண்டு மார்க்ஸ் மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.

சமகால சூழலியல் சிக்கல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளும் அடிப்படைக் காரணியாக இருப்பது முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தி முறை ஆகும்.அதாவது மூலத்தனதிற்கும் தொழிலாளி வர்க்கத்துடனான முரண்பாடு மூலதனத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடாக உள்ளது.மூலதனத்தை குவிப்பதற்கான உற்பத்திப் பெருக்கத்திற்கான,லாபத்திற்கான முதலாளித்துவத்தின் “அனிமல் ஸ்ப்ரிட்” ஆனது தொழிலாளரிகளின் உழைப்பை சுரண்டுவதோடு இயற்கை வளங்களையும் சுரண்டுகிறது.தனது உற்பத்திக் கழிவுகளால் சுற்றுச்சூழலை  சீரழிக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் கேடுகளை அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளை அறிவியல்பூர்வமாக வெளிப்படுத்திய மார்க்சும் எங்கெல்சும் இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண்பாட்டை முதலாளித்துவம் கூர்மைப்படுத்துவது குறித்து அக்கறை கொண்டிருந்தததை அவர்களது எழுத்துக்களே பிரதிபளிக்கின்றன.

Working class condition in England என்ற நூலில் தேம்ஸ் நதியில் கழிவுகள் கலப்பது குறித்து தனது விமர்சனத்தை எங்கெல்ஸ் எழுதியிருப்பார்.போலவே மார்க்ஸ் தனது “வளர்சிதைமாற்ற பிளவு” என்ற கருத்தின் வழியே மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாடுகுறித்து பேசி வந்தார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் இன் சூழலியல் கரிசனத்தை பின்னாளில் சுவீசி,பாரன் ஆகியார் பல கட்டுரைகளில் எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் மன்த்லி ரிவியூவில் தொடக்க காலத்தில் பணியாற்றியவர்கள்.

இவர்களின் மரபின் தொடர்ச்சியாக பெல்லமி பாஸ்டர் தனது ஆய்வுமுறைகளை ஆழ அகலப்படுத்திக் கொள்கிறார்.குறிப்பாக சூழலியல் சிக்கலை தத்துவார்த்தமாக அணுகிய மார்க்சின் வளர்சிதைமாற்றப்பிளவு(Metablic rift)  கோட்பாட்டை கவனப்படுதியதில் பாஸ்டரின் பங்கு முக்கியமானது.ஜெர்மானிய வேதியல் அறிஞரான லைபிக்கின் ஆராய்ச்சியில் கவரப்பட்ட மார்க்ஸ் ,மக்கள்தொகை திரட்சியாக உள்ள  புது நகரங்களின் தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்காக   முதலாளித்துவமானது  மண்ணின் வளங்களான பொட்டாசியம் ,நைட்ரஜன் போன்றவற்றை திருடி மறுதலையாக   புவிக்கு   தூய்மைக்கேட்டை விளைவிக்கிறது என்று விமர்சிக்கிறார்.லைபிக் இதை கொடிய  சுரண்டல்(“Raubbau” ) அல்லது  கொள்ளை அமைப்பு  என்று அழைக்கிறார்.மார்க்ஸ்  இதை விவரிக்கையில்

‘’முக்கிய விஞ்ஞானிகளுள் குறிப்பாக ,ஜெர்மன் விஞ்ஞானியான லைபிக் என்னை பெரிதும் கவனிக்கவைக்கிறார் மண் வளத்தை சுரண்டும் கொள்ளையடிக்கும்  இம்முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு குறைவான காலத்தில் அதிக லாபம் அடைகிறார்கள் .பழைமையான வேளாண் சமூகங்களான சீனா ,எகிப்து ,ஜப்பான் போன்ற நாடுகளில்  அறிவார்ந்த வகையில் வேளாண்மையை மேற்கொண்டு   இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மண்ணின் வளங்களை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல்  மண் வளத்தினை அதிகரிக்கவும் செய்துவந்ததை ,முதலாளித்துவ கொள்ளை முறையானது உலகின் சில பகுதிகளில் உள்ள மனவளத்தை அரை நூற்றாண்டில் சுரண்டியது’’.

 மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை மாற்றத்தில் இக்கொள்ளையானது   "தீர்க்க முடியாத பிளவாக" முதலாளித்துவ சமூகத்திற்குள் வடிவெடுக்கும் என கருதுகிறார். முதலாளித்துவ வேளாண் உற்பதிமுறையின்  உண்மை பண்பு குறித்து மார்க்ஸ்  'முதலாளித்துவ உற்பத்தியானது தொடர்ச்சியாக  மண்ணையும் உழைப்பையும் சுரண்டிய வளர்க்கிறது' என்கிறார்.

அன்று மார்க்ஸ் கணித்தது இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் எதார்த்த உண்மையாக விட்டது. முதலாளித்துவத்தால் இப்பூவுலகுக்கு ஏற்படுத்தப்படுகிற அச்சுறுத்தலுக்கும் அதனது உற்பத்திமுறைக்குமான உறவைச் சரியான கண்ணோட்டத்தில் அறிவியல் பூர்வமாக அணுகுவதற்கு மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. மார்க்சிய வழிப்பட்ட முதலாளித்துவத்  திறனாய்வின்  வழியில் செல்வது மட்டுமே இன்றையச் சூழலியல் சிக்கல்களின் முழுப்பரிமாணத்தைப் புரிந்துகொள்ள நம்முன் உள்ள வாய்ப்பாக இருக்கிறது.

 நன்றி:ஜனசக்தி 

Sunday 16 July 2023

காலநிலைமாற்றம் எனும் பேராபத்து - முதலாளித்துவத்தின் கிடுக்குப் பிடியில் பூவுலகு

 


கடந்த சில நாட்களாக இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் பெய்து வருகிற தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் பெய்து வருகிற கனமழையால் யமுனையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.ஹிமாச்சல பிரதேசத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய கனமழையை எதிர்கொள்வதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.சண்டிகரில் 1952 ஆண்டுக்கு பிறகு தற்போது ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 283 மிமீ மழை பொழிந்துள்ளது.உத்தரகான்ட் மற்றும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் பெய்து வருகிற தொடர் மழையின் காரணமாக வரலாறு காணாத வகையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

லடாக்கில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி வரை சராசரியை விட 7 விழுக்காடு மழை குறைவாக பெய்திருந்த நிலையில் ஜூலை 8,9  தேதிகளில் மட்டும் சுமார் 19 மிமீ மழை கொட்டியுள்ளது.இது இயல்பை விட 1000 விழுக்காடு அதிகமாகும்.பொதுவாக பனிப்பொழிவிற்கு பெயர்போன லடாக்கில் தற்போது பனிக்கு மாறாக தீவிர மழை பொழிந்துவருகிறது.இந்த மழைக்கு தாக்குப் பிடிக்கமுடியாமல் அப்பகுதி மக்களின் வீடுகள் ஒழுகத் தொடங்கியுள்ளது.ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. லடாக்கில் இதுபோன்றதொரு அதீத மழைபொழிவு நிகழ்வானது  கடந்த 2010 ஆண்டின்  ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்தது என ஐஐடிஎம் (IITM) ஐ சேர்ந்த அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேற்கூறிய மாநிலங்களில் குஜராத் மற்றும் மத்திய மாநிலங்கள் நீங்கலாக இதர வட மாநிலங்களில் ஜூலை மாதம் பெய்கிற சராசரி மழை அளவைவிட 200 விழுக்காடு அதிகமழை பொழிந்துள்ளதாக இந்து நாளேட்டின் ஆய்வுத் தகவல்கள் கூறுகிறது.இத்தொடர் மழையின் விளைவான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர்.இதுவரை சுமார் 22 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.வெள்ளநிவாரணப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாநிலங்களில் பொழிந்து வருகிற தொடர் கனமழைக்கு காலநிலை மாற்ற நெருக்கடியே முக்கிய காரணமென டவுன்டுஎர்த்(Downtoearth) சூழலியல் ஆய்வு இதழ் கூறுகிறது.அதீத மழை பொழிவு என்பது காலநிலைமாற்றத்தின் தாக்கத்தால்  பருவமழை பொழிகிற பண்பில் மாற்றம் ஏற்பட்டு,ஒரு சில மாதங்களில்  பொழிய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் திடுமென பொழிவதைக் குறிக்கிறது.அதீத மழை ஒரு பக்கம் என்றால் அதீத வெயில் தாக்கமும் மற்றொருபுறம் நம்மை தாக்குகிறது.

கடந்த மார்ச்-23 மாதத்தில்,122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெயில் கொளுத்தியது. கடந்த 1901 ஆம்  ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் மார்ச் மாதங்களில் 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகிவந்த  நிலையில், நடப்பாண்டில் வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை தொட்டது குறிப்பிடத்தக்கது.

பருவம் தப்பிய மழை பொழிவு,அதீத மழை பொழிவு,கடுமையான வெப்பம் வறட்சி போன்ற பருவநிலை மாற்றங்கள் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்துவரவிலை.உலகெங்கிலும் இந்தச் சிக்கல் தீவிரமடைந்துவருவதை அறிவியல் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அறிவியலாளர் கோபர்நிகஸின்  பெயரிலான கோபர்நிகஸ் காலநிலைமாற்ற சேவை மையமானது ஐரோப்பிய ஆணையத்தின் அங்கமாக  இயங்கி வருகிறது.சுருக்கமாக C3S என்றழைக்கப்படுகிறது.உலகின் பல பகுதிகளில் நிகழ்கிற காலநிலை மாற்ற தகவல்களை ஒன்றுதிரட்டி மாதமொருமுறை அறிக்கையாக இந்த அமைப்பு வெளியிடுகிறது.குறிப்பாக மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை,அண்டார்டிக்காவின் பனிபடர்ந்த கடல்களின் பண்புகள் குறித்த செயற்கைக்கோள் தகவல்களை சேகரித்து ஒன்று திரட்டி வெளியிடுகின்றன. அதனது அண்மைய அறிக்கையானது, வரலாற்றில் இரண்டாம் முறையாக அதிக வெப்பம் மிகுந்த மார்ச் மாதமாக கடந்த மார்ச் 2023  ஐ அறிவிக்கிறது.குறிப்பாக வட ஆப்பிரிக்கா,தென்மேற்கு ரஷ்யா மற்றும் ஆசியாவில் சராசரி மார்ச் மாத வெப்பத்தை விட இந்தாண்டு மார்ச் மாதத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது.அதேநேரத்தில் மேற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் சராசரியை விட அதிக குளிர் மிகுந்த மார்ச் மாதமாக இருந்ததுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சராவின் மலை உச்சியில் நெற்றிச் சுட்டியாக அலங்கரிக்கின்ற வெள்ளைப்பனிச்சரிவுகள் அடுத்த இருபது ஆண்டுகளில் கரைந்து போய்விடுமென மற்றொரு அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.கிழக்கு ஆப்பிரிக்காவில் பனிப்படலங்கள் வேகமாக உருகிவருவதைப் பார்க்கும்போது எதிர்காலத்தில்,பனிமுகடுகளே ஒன்றுமில்லாமல் போகிற சாத்தியமுள்ளது என உலக வானிலை அமைப்பின் செயலாளர் தாலஸ் எச்சரிக்கிறார்.  

காலநிலை மாற்றம் - காரணமும் விளைவுகளும்:

இயற்கை அமைப்பின் மீதான மனிதர்களின் தலையீடுகள் தான் காலநிலை மாற்றத்திற்கான காரணம் எனக் கூறுவதில் சில மழுப்பல்களும் நழுவல்களும் உள்ளன.குறிப்பாக  முதலாளிய சமூகத்தின் லாபநோக்கிலான மிகை   பொருளுற்பத்திமுறையே காலநிலை மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது என நாம் குறிப்பிட்டு அழுத்தமாக கூறவேண்டியுள்ளது.முதலாளித்துவ உற்பத்தி முறையின் உழைப்புச் சுரண்டலை அறிவியல் பூர்வமாக தனது மூலதனம் நூலின் மூன்று பாகங்களில் வழியே விளக்கிய மார்க்ஸ்,முதலாளித்துவ அமைப்பின் கொள்ளை உற்பத்தி முறையை தோலுரித்துக் காட்டுகிறார்.

இன்றைய நவீன காலத்தின் பொருளுற்பத்தி முறைக்கு முக்கிய பங்களிப்பு செய்கிற  நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்களை,உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுத்தப்படும்போது அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்களை(கார்பன் டை ஆக்சைடு(கரிக்காற்று)மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்)வளிமண்டலத்தில்  வெளியிடுகின்ற. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஏழு கோடி டன் என்ற அளவில்!.மற்றொரு புறமோ இப்பசுமைக்குடில் வாயுக்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்ட அமேசான்,போர்னியோ போன்ற மழைக்காடுகள் வர்த்தக லாபத்திற்காக வேகமாக அழிக்கப்பட்டு வருவது சிக்கலை இரட்டிப்பாக்கிறது.

வளிமண்டலத்தின் மீதான அபரிவிதமான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வால் ,பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிளான சூரியவெப்பக்கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத்தொடங்குகிறது.இதனால் புவியின் சராசரி  வெப்பநிலை, நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்பவெட்ப சமநிலையை சீர்குலைய வைக்கிறது.இதன் காரணமாக தற்போது புவியின் வெப்பநிலை 0.8 பாகை(செல்சியஸ்) அதிகரித்துள்ளதாக தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.அதிகரிக்கின்ற இந்த புவியின் வெப்பநிலை காலநிலை மாற்றத்திற்கு காரணமாகிறது.

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் பனிப்பாறைகள்,அண்டார்டிக்காவின் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது. 1993 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு 3 மில்லி மீட்டர் அளவாக கடல்மட்டம்  உயரத்தொடங்கியிருக்கிறது. இதன்  வீதம் அனுதினமும் அதிகரித்துவருகிறது. இவ்வீதம் ஆண்டுக்கு 7  செ.மீ லிருந்து 13  செ.மீட்டர் வரை இருக்கலாம் என விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கார்ல்சன் தெரிவிக்கிறார்.கடல் மட்டமானது குறைந்தபட்சம்  ஒரு மீட்டர் அல்லது இரண்டு  மீட்டர் உயர நேர்ந்தால்,ஆசிய  நாடுகளான வியட்நாம் ,வங்காளதேசம் மற்றும் பிற தீவு நாடுகளில் வாழும் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் அழிவுகளை சந்திப்பார்கள்.இந்நிலையில்,கால நிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வீதத்தைக் காட்டிலும் அதிவேகமாக கடல்மட்டம் உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 போலியான மாற்றுத் தீர்வுகள்:

தற்போதைய சந்தை அமைப்பான நவதாராளவாத சந்தைப் பொருளாதாரத்தில் தேவையை மீறிய லாபநோக்க உற்பத்திமுறையால் ஏற்படுகிற சூழல் அழிவுகளுக்கு முதலாளித்துவ வர்க்கமும் அதற்கு தலைமை தாங்குகிற முதலாளித்துவ அரசுமே  காரணமாக உள்ளது.

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது  முதலாளியத்தின் கட்டுப்பாட்டில் முழுவதும்  வந்தபின் ,சமூகத்தின் தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு அது தன் உற்பத்தி அமைப்பை ஒழுங்கமைப்பதில்லை. மாறாக அது விரைவான உற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற நோக்கத்தால்  தனது உற்பத்தி முறையை நிகழ்த்துகிறது.

சமூகத்திற்குத் தேவை இல்லை என்றாலும் தேவையை உருவாக்கி விளம்பரக் கருத்தியலின்  வாயிலாக அது சந்தையில் லாபம் குவிக்கிறது.வெறித்தனமான அதன் உற்பத்திமுறையானது இயற்கை வளங்களை வரைமுறையின்றி அழிக்கிறது.தனது உற்பத்தி நச்சுக்கழிவுகளால் இயற்கைக் கட்டமைப்பை முற்றாகத் சிதைக்கிறது.இந்நிலையில் முதலாளிய சமூகத்தின்  லாப நோக்க உற்பத்தி முறையையும் அதன் நிதி நிறுவனங்களான உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதியம் போன்ற அதிகார நிதி மையங்களை நோக்கியே நாம் காலநிலை மாற்ற சிக்கலுக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டும்.

எதார்த்த உண்மை இவ்வாறாக இருக்க முதலாளித்துவ நாடுகளால் இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலாது என்பது வெள்ளிடை மலை.தற்போதைய ஐநாவின் காலநிலை மாநாடுகளில் இதுதான் நடந்துவருகிறது.திருடன் கையிலே சாவி கொடுத்ததைப் போல என்றதொரு சொலவடையைத்தான் காலநிலை மாநாடுகள் நினைவூட்டுகிறது.

இன்றைக்கு உலகில் உள்ள பெரும்பாலான சூழல்வாதிகள், சூழலியல் அழிவுக்கும் அரசியல் பொருளாதாரத்திற்குமான உறவை பார்க்கத் தவறுகிறார்கள்(அல்லது கண்டும் காணமல் இருகின்றனர்).முதலாளித்துவ சமூக விழுமியங்களை உள்வாங்கி வாழ்கிற சமூகத்திற்கு அதனது போலித்தன்மையும் சுரண்டலும் இயல்பாகவே அதனது முதல் தோற்றத்தில் கண்களுக்குப் புலப்படுவதில்லைதான்..”ஒவ்வொரு சூழல்வாதியும் முதலாளித்துவம் குறித்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நூலில் மேக்டாப் இதை அழகாக சுட்டிக் காட்டிருப்பார்.

உலகின் அனைத்து மூலைமுடிக்கிலும் வியாபித்திருக்கும் பொருளாதார அமைப்பாக முதலாளித்துவம் உள்ளது.எவ்வாறு நம் கண்களுக்கு தெரியாத காற்றை சுவாசித்து வாழ்கிறோமோ அதுபோல முதலாளித்துவ அமைப்பின் ஓரங்கமாக நாமறியாமலேயே வாழ்ந்து வருகிறோம்.அதாவது நீந்துகிற தண்ணீரை அறியாத மீன் போல நாமிந்த அமைப்பிலே நீந்துகிறோம்.முதலாளித்துவ அமைப்பின் ஒழுக்கநெறியாக பாவிக்கப்படுகிற மதீப்பீடுகளை உள்வாங்கியே நாம் வளர்கிறோம்.செல்வம் சேர்ப்பது,உழைப்பைச் சுரண்டுவது,போட்டியிடுவது ஆகியவையெல்லாம் இந்த அமைப்பின் ஒழுக்கமாக ஏற்றுக் கொள்வதுமட்டுமல்லாது,இவையெல்லாம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான முன் நிபந்தனையாக வாதிடப்படுகிறது”

சிக்கலின் மையமே இதுதான்.அதாவது சமூக வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி போன்ற  முதலாளித்துவ கருத்தாக்கமானது “சூழலியல் பாதுகாப்பு” என்ற அம்சத்தை வெற்றிகரமாக பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.இயற்கை வளத்தை சுரண்டாமல் சமூக வளர்ச்சி சாத்தியமில்லை என்ற மனிதமையவாதத்தை பொதுபுத்திக் கருத்தாக மாற்றுகிறது.இந்த பொதுவான மனித மையவாத திரைக்கு பின்னே  கெட்டிக் காரத்தனமாக முதலாளித்துவ வர்க்கம் மறைந்துகொள்கிறது.

இந்த திரையை மார்க்சியர்கள் மாத்திரமே விலக்கி,முதலாளித்துவ வர்க்கத்தை அம்பலப்படுத்த முடியும்.இங்கே தனியுடமை வளர்ச்சிக்காக,லாபத்தை மென் மேலும் குவிப்பதற்காக காட்டை அழித்து நிலக்கரி சுரங்கம் தோண்டுகிற அதானி நிறுவனம் முதல் அமேசான் மழைக்காடுகளை அழித்து எண்ணெய் எடுக்கிற எக்சான்மொபைல்  நிறுவனம் வரை பெரும் ஏகபோக நிறுவனங்களே உழைப்புச் சுரண்டலையும் இயற்கை வளச்சுரண்டலையும் மேற்கொள்கின்றனர் என உரக்க பிரச்சாரம் செய்யவேண்டும்.பெரும் ஏகபோக காரப்பரெட் நிறுவனங்களே காலநிலை மாற்றத்திற்கு காரணம் என்ற உண்மையை எடுத்துரைக்கவேண்டும்.அப்போது மட்டுமே நடைமுறை தீர்வை நோக்கி ஓரடி முன்னே எடுத்து வைக்க இயலும்.

ஆதாரம்:

https://www.downtoearth.org.in/news/climate-change/month-of-climate-contradictions-contrasts-noted-worldwide-in-march-2023-finds-copernicus-88644

https://www.downtoearth.org.in/news/climate-change/the-snows-of-kilimanjaro-could-vanish-by-2040-due-to-climate-change-report-79776

https://www.downtoearth.org.in/news/climate-change/north-india-deluge-2023-ladakh-a-cold-desert-received-over-10-000-of-its-annual-rain-on-july-8-9-90496

நன்றி-ஜனசக்தி 

Tuesday 11 July 2023

சார்லஸ் டார்வினிடம் பாஜக அஞ்சுவது ஏன்?

 


கடந்த 2018  ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பேசிய பாஜகவின் மனிதவள வளர்ச்சித் துறை அமைச்சர் சத்யபால் சிங்,சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு தவறானது என்றும் மனிதக்குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை,ஏனெனின் யாரும் அதைப் பார்த்ததில்லை என பாஜகவிற்கே உரித்தான  அறிவீனத்துடன் பேசியது சர்சையாகியது.அதோடு நில்லாமல் சார்லஸ் டார்வினின் பரிணாம விதிக் கோட்பாடு பள்ளி கல்லூரி பாடப் புத்தகங்களிலிருந்து  நீக்கப்பட வேண்டும் என வாதிட்டார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு அறிவியலாளர்கள் மத்தியில் அப்போது கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தன.ஆனாலும் அவ்வபோது இந்தப் பேச்சை அவர் பேசாமல் இல்லை.

தற்போது இந்த விவாதம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகாலம் கழித்து, அமைச்சர் கூறியதைப் போல இந்தியாவில் NCERT பாடப் புத்தகங்களிலிருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது.முன்னதாக கோவிட் காலத்தில் பாடப் புத்தங்களின் சுமைகளைக் குறைப்பதாக கூறி இந்திய வரலாற்றுப் பாடத்தில் முகலாயர்களின் ஆட்சி காலத்தை முற்றிலும் நீக்கியும் காந்தியார் படுகொலையை வெட்டியும்,இந்திய சுந்திர போராட்ட வரலாற்றைத் திரித்தும் சிதைத்தும் தனது இந்துத்துவ கருத்து நிலைக்கு  உகந்த பல்வேறு வெட்டி ஓட்டும் வேலைகளை வரலாற்றுப் புத்தகங்களில் பாஜக மேற்கொண்டது.

இந்த வரலாற்று திரிபுக்கு எதிராக கண்டனங்கள் எழந்து வந்த நிலையில் தற்போது சத்தமில்லாமல் அறிவியல் பாடப் புத்தகத்தில் டார்வினை நீக்கியுள்ளார்கள்.

டார்வினிடம் பாஜக பயப்படுவது ஏன் ?

டார்வினின் பரிணாமக் கோட்பாடு குறித்த உயிரனத்தின் தோற்றம் நூலானது 1859 ஆம்  ஆண்டில்  வெளிவந்தது.இந்நூல் வெளிவந்தபோது அதனது பிரதியை உடனடியாக வாசித்த மார்க்ஸ், எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் “இந்நூல் கரடு முரடான நடையில் இருந்தாலும்,நமது இயற்கை வரலாறு குறித்த கோட்பாட்டிற்கு வலு சேர்க்கிறது”என டார்வினைப் பாராட்டுகிறார்.

19  நூற்றாண்டில் டார்வினின் பரிணாமக் கோட்பாடு வெளிவந்தபோதே கிறித்துவ மத நிறுவனங்கள் கடும் ஆட்சேபம் செய்தன.ஏனெனில் கிறித்துவத்தின் புனித நூலாம் பைபிளில் ஏசுபிரானின் கற்பனையிலே உலகமும் மனிதர்களும் படைக்கப்பட்டார்கள் என்ற “படைப்புக் கோட்பாடே” கிறித்துவ மதத்தின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.மாறாக டார்வினின் பரிணாமக் கோட்பாடு,ஒவ்வொரு உயிரும் பரிணாமத் தேர்வின் அடிப்படையில் உருவானது என்றும் குரங்கிலிருந்தே மனிதன் வளர்ச்சியடைந்தான் என்றும் இயற்கையின் வரலாற்று வளர்ச்சியின் விளைபொருளே மனிதன் என சான்றாதாரத்தோடு நிறுவினர்.

இந்த முடிவானது மதத்தின் படைப்புக் கோட்பாட்டு வாதத்தை வீழ்த்தி தவிடுபொடியாக்குகிறது. அன்று முதல் இன்றுவரை கிறுத்துவ மத செல்வாக்குள்ள கட்சிகள் மேற்குலகில் ஆட்சிக்கு வந்தால், டார்வினின் பரிணாமக் கோட்பாடு பகுதியை பாடப் புத்தகத்தில் வைப்பதில் ஏகப்பட்ட தகராறுகள் நடந்துவருகிறது.

மேற்காசியாவில் இஸ்லாமிய நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல.உதாரணமாக தற்போது துருக்கியில் ஆட்சியில் இருக்கும் வலதுஅடிப்படைவாத அரசானது,பரிணாமக் கோட்பாட்டை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இவ்வாறு இஸ்லாமும் கிறித்துவமும் பரிணாமக் கோட்பாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்க இந்துத்துவாதிகள் சும்மாவா இருப்பார்கள்.ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றல், எதன் ஆதாரத்தில் பரிணாமக் கோட்பாட்டை மறுப்பது என்பதுதான். “வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ பிழைத்தோம். அவன் வைத்த பெயர் (இந்து) நம்மைக் காப்பாற்றியது என்று காஞ்சி சங்கராச்சாரியார் அவரின் தெய்வத்தின் குரல்நூலில் கூறியதுபோல இந்து மதத்தில் எந்தக் கூறின் அடிப்படையில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பது என்பதுதான்!

இந்துமதத்தில்,வேதத்தை அடிப்படையாகக் கொள்வதா?இதிகாச புராணங்களை அடிப்படையாகக் கொள்வதா?மனுக் கோட்பாட்டின் அடிப்படையில் மறுப்பதா? என பல்வேறு குழப்பங்கள் அவர்களை சூழ்ந்தன.

இறுதியாக பெருமாளின் தசாவதார புராணத்தை டார்வினுக்கு எதிராக தேர்ந்துகொண்டார்கள்.டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு முன்பே இறைவன் மச்ச அவதாரம்,வாமன அவதாரம் ,நரசிம்ம அவதாரம் என பல அவாதரங்கள் எடுத்துள்ளார்.மேலும் பகவதக் கீதையில் கடவுளே மனிதனாக தோன்றியுள்ளார்.ஆகவே மேற்குலகின் படைப்புக் கோட்பாட்டை விட பலமடங்கு பழமையானது இந்து மதத்தின் படைப்புக் கோட்பாடு என வாதிடத் தொடங்கினர்.விநாயகக் கடவுளின் மனித உடலும் யானைத் தலையும் நவீன பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோட்டம் என்ற பிரதமர் மோடியின் புகழ்பெற்ற வாசகத்தையும் நாமிங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்!

காலத்திற்கு பிந்தி தள்ளுவது முடிந்தால் காலத்திற்கு வெளியே தள்ளுவது என்பதே வரலாற்றை திரிப்பதற்கு ஆர் எஸ் எஸ் தேர்ந்துகொண்ட முக்கிய உக்திகளில் ஒன்றாகும்.உதாரணமாக வேத காலம்,மகாபாரத போர் நடந்த காலம்(புனைவாக)சரஸ்வதி ஆறு,ராம ராஜ்ஜியம் என வரலாற்று காலத்திற்கு பின்தள்ளுவதும் பழமையிலும் பழமை என இட்டுக் கட்டுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாற்றுப் பார்வையாகும்.

மரபணு அறிவியலைப் பொறுத்தவரை  இந்துத்துவவாதிகள் பெரிதாக  கண்டுகொள்வதில்லை.ஏனெனில் ஆரிய இனக் கோட்பாட்டை பல காலங்களில் அவர்கள் உயர்த்தி பிடித்தே வந்துள்ளார்கள்.மற்ற மனிதர்களை விட ஆரியர்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணத்தை பல பாஜக தலைவர்களே பேசியுள்ளார்கள்.அவர்களது பிரச்சனை டார்வினின் பரிணாமக் கோட்பாடே.ஏனெனில், எவ்வாறு பிற மதங்களின் படைப்புக் கோட்பாட்டை டார்வினியம் கேள்விக்குட்படுத்துகிறதோ அதுபோன்றே இந்து மதங்களின் இதிகாச புராண அவதாரங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது.

மேற்குலகில் திருச்சபையின் படைப்புக் கோட்பாடு மீதான விமர்சனமானது அறிவொளிக் காலத்தில் தொடங்குகிறது. இறையியலுடன் இயற்கையை இணைத்த திருச்சபை இயற்கைவாதத்திற்கு அறிவொளிக் காலத்தில் கெப்ளர்,கலீலியோ,ஹார்வி போன்றோர்களும் அதைத்தொடர்ந்த அறிவியல் காலத்தில் டார்வினும் திருச்சபை இயற்கைவாதத்திற்கு மரண அடியைக் கொடுத்தனர்.மேற்குலகில் நடைபெற்ற அறிவியல் வளர்ச்சிகள் அதைத்தொடர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்துறை  எழுச்சிகள் அரசியல் பொருளாதார  மாற்றங்கள்  சமூகத்திடமிருந்து மதத்தை விலக்குவதாக அமைந்தது.

ஆனால் இந்திய ஒன்றியத்தில் நிலைமையோ தலைகீழாக இருந்தன.காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் இந்துத்துவ நீரோடையில் நீர்த்து போன அரை சங்கிகளாக இருந்தனர் என்பதை நாமிங்கு கவனிக்கவேண்டும்.இந்தியாவில் மேற்குலகைப் போல் இல்லாமல் மதமும் அரசியல் விடுதலையும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டன.இதன் காரணமாகவே ஒரு பெரும் வகுப்புவாத பிரிவினையோடு தொடங்கிய இந்திய விடுதலையானது இன்றைக்கும்  வகுப்புவாத கலவர நாடாகத் தேங்கிப்போவதற்கும் ஆர் எஸ் எஸ் போன்ற சங் பரிவார கும்பல்கள் அரசியல் பண்பாட்டு அரங்கில் வலுப்பெறுவதற்கும்  பெருங் காரணமாக அமைந்தது.அரசியல்,நிர்வாகம்,பண்பாடு,இன்ன பிற அனைத்து துறைகளிலும் இந்து மதக் கருத்தியல் ஆளும் வர்க்க கருத்தியலாக பற்றிப் படறிவிட்டன.அதன்  ஒரு தெரிப்புத்தான் தற்போது பாடப் புத்தகத்திலிரிருந்து டார்வின் நீக்கப்பட்டது.

ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவியல் விரோத பிற்போக்குவாதத்திற்கு எதிராக கேரளாவின் இடதுசாரி அரசாங்கம்,தனிப் பாடமாக நீக்கப்பட்ட டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வெளியிடுகிறது.இது பாராட்டத்தக்க முன்னெடுப்பாகும்.கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் இம்முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

நன்றி-ஜனசக்தி 

Monday 10 July 2023

டி.டி கோசம்பியும் சூழலியலும்

 


டிடி கோசம்பி, பெரிதும் அவரது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளால் அறியப்படுபவர்.வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவத்தின் உள்ளொளியில் இந்திய வரலாறு, சாதி மத உருவாக்கம்,அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நுட்பமான கட்டுரைகளாலும் நூற்களாலும் புதிய திறப்புகளை தந்தவர்.கோசம்பி ஒரு பல்துறை அறிவுஜீவி. லியோனார்டோ டா வின்சி, அவருக்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்!

பண்டைய நாணவியல் குறித்து சொந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டவர்,புள்ளியல் துறையில் கரை தேர்ந்தவர்.புரட்சிக்கு பிந்தைய மக்கள் சீனத்தில் புள்ளியில் துறைக்கு ஆலோசனை வழங்க சீன அரசால் அழைக்கப்பட்டவர்.டாட்டா அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஹோமி பாபாவுடன் பணியாற்றியாவர்.பின்னர் பாபாவின் அணுக்கொள்கை மீதான முரண்பாடுகளால்,கட்டம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டார்.கோசம்பி, நாட்டார் வழக்காற்றியல் இனவரைவியல் துறைகளிலும் புலமை பெற்றவர்.பன்மொழி அறிந்தவர்.இப்படி சொல்லிக் கொண்டே போகலம்.ஆனால் இங்கு நான் கூற வருவது டி.டி கோசம்பியின் அதிகம் அறியப்படாத சூழலியல் முகம் பற்றியே!

இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் சூழலியல் நெருக்கடிகள் அரசியல் அரங்கின் முக்கிய விவாதமாக மாறிவிட்டது.சூழலியல் இயக்கங்களின் விழிப்புணர்வு போராட்டங்களுக்கு உலக நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமானது,பல உயிர்த் தியாகத்திற்கு பின்பு வெற்றி பெற்று ஆலை மூடப்பட்டுள்ளது.கூடங்குளம் அனுவுலைப்பூங்காவிற்கு எதிரான போராட்டங்களை மூர்க்கமாக அரசு ஒடுக்கியது..ஆனாலும் சூழலியல் பாதுகாப்பு பற்றி பல விவாதங்களை இப்போராட்டங்கள் ஏற்படுத்தின.இன்று பல ஐரோப்பிய  நாடுகளில் பசுமை கட்சிகள், மக்கள் செல்வாக்கு பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ளன.ஐநாவில் பருவநிலை மாற்ற மாநாடுகள் தலைப்புச் செய்தியாகின்றன.

சமகால முதலாளித்துவ அமைப்பின் லாப நோக்க உற்பத்தி முறையே இன்றைய இயற்கை வள அழிப்பிற்கும் சூழல் மாசிற்கும் காரணமாக இருப்பதை மேற்குலகில் ராச்சல் கார்சன் முதல் பெல்லாமி பாஸ்டர் வரை தக்க ஆதரங்களுடன் எடுத்துரைத்து வந்துள்ளனர்.குறிப்பாக மார்க்சின் சூழலியல் பார்வையை  பெல்லாமி பாஸ்டர் போன்ற மார்க்சிய அறிஞர்கள் பேசத் தொடங்கிய பின்னரே வரைமுறையற்ற உற்பத்தியின் சூழலியல் கேடுகள்  குறித்தும் திட்டமிட்ட நீடித்த வளர்ச்சியின் அவசியம் குறித்தம் விவாதங்கள் பரவலாயின.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் நேருவின் பெருவீத தொழித்துறை கொள்கை மீதான விமர்சனத்திலிருந்து, ஓர் ஒருங்கிணைந்த சூழலியல் விமர்சனப் பார்வையை ஜே சி குமராப்பா முன்வைத்தார்.பெரிய அணைகள் மற்றும் தொழிற்சாலை  கட்டுமானங்களை விமர்சித்த  ஜே.சி குமரப்பா மாற்றாக காந்தியப் பொருளியல் கொள்கைகளை பேசினார்.அவரது பொருளியில் கொள்கைகளை தொகுத்துக்கூறுகிற  ‘மன்னுமைப் பொருளியம்’ (Economy of Permanence) ஆய்வானது கிராம சமூக கற்பனாவாதமாக வர்ண  சாதி அமைப்புகளின் கொடூரங்களை கவனத்தில் கொள்ளாதவையாக இருந்தன.கிராமப்புற நிலையுடமை உற்பத்தி உறவுச் சங்கிலியானது,சாதிக் கட்டுமானத்திற்கு ஆதாரமாக இருப்பதை காணத் தவறுகிறார்..இந்த சூழலில் டி.டி கோசம்பியின் சூழலியல் குறித்த பகுப்பாய்வு,குறிப்பாக நீடித்த மேம்பாடு பற்றின மார்க்சிய பார்வை நம்மை பெரிதும் கவனம் ஈர்க்கிறது.

மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம் என்பது குழந்தைத்தனம்:

முதலாவது அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம்,குறிப்பாக தொழிற்துறையை முற்றிலும் புறக்கணித்து மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம்,எளிமையான ரம்மியமான கிராம வாழ்க்கையில் வாழ்வோம் என்பதெல்லாம் குழந்தைத்தனமான எதிர்வினை என கோசம்பி விமர்சிக்கிறார்.கோசம்பியின் இந்த விமர்சனம் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது.அவரது சொற்களை மேற்கோள் காட்டுவது என்றால் “அறிவியலை குற்றம் சொல்லக் கூடாது,பேராசைதான் அதனைத் தவறாக வழி நடத்துகிறது.இயற்கையின் சுற்றப்புரத்தை பொறுத்தவரை மனிதன் கையறு நிலையில் இருந்தான்.இயற்கையைப் பொறுத்தவரை மனிதன் விளைவித்த அரிசி,கோதுமை போன்ற தானியங்களும் செங்கல் வீட்டினைப் போல செயற்கையானது.மனிதன் உழவை நிறுத்தி விட்டால் தானியங்கள் நமக்கு கிடைக்காது” என்கிறார். (வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்- மூ.அப்பணசாமி,வெளியீடு ஆறாம்திணை.)

கோசம்பியின் இந்தப் பார்வை மிக முக்கியமானது.அறிவியல் தன்மையுடையது.நாம் அறிவியல்தொழில்நுட்பத்தின் கேடுகளை செயற்கையானது என புறக்கணித்து இயற்கைக்குத் திரும்ப முடியாது.ஏனெனில் விவசாயமே செயற்கைதான்.மனித முயற்சியால் உழைப்பால் நாம் தானியங்களை உற்பத்தி செய்கிறோம்.இங்கு சிக்கல் என்னவென்றால் அறிவியல் தொழில்நுட்பமானது  யாரின் நலனில் பேரில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.ஏனெனில் தற்போதைய முதலாளித்துவ அமைப்பில், அறிவியலும் தொழில்நுட்பமும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது.திரு ஜே சி குமரப்பா அவர்கள்,அறிவியல் தொழில்நுட்பத்தின் வர்க்க கண்ணோட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை.(கிராம சமூகத்தின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் x உழைக்கும் வர்க்கத்திற்குமான வர்க்க முரண்பாட்டை காணத் தவறியது போல)கோசம்பியோ, அறிவியலின் வர்க்கப் பார்வை அம்பலப்படுத்தி மேலும் சமூக நலனுக்கு திருப்பக் கோருகிறார்.

அணுஆற்றல் எதிர்ப்பு:

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணு கூண்டு வீச்சும் அதனது அழிவும் கோசம்பிக்கு அணு ஆற்றல் பயன்பாட்டின் மீதான பார்வையை தீர்மானகரமாக உருவாக்கியது எனலாம்.அணு ஆற்றலின் மாய வித்தைகளால் உலகம் சொர்க்கமாக மாறப் போகிறது என்ற பிரச்சாரத்தை கடுமையாக சாடுகிற கோசம்பி,பரிசோதனைக்காக வேடிக்கப்படுகிற அணு குண்டுகளால் ஏற்படுகிற பாதிப்புகள் கூட அனைத்து ஜீவராசிகளின் இனப் பெருக்கத் தன்மையில் நீக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.இதன் நீட்சியாக அணு ஆயுத பயன்பாட்டிற்கு எதிராக உலக சமாதான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விழிப்புணர்வு கூட்டங்களை பல நாடுகளில் நடத்துகிறார்.

கோசம்பி அணு ஆயுத பயன்பாட்டை மட்டும் எதிர்க்கவில்லை.இந்தியாவின் அணு மின் திட்டங்கள் மீதும் கடுமையான விமர்சனப் பார்வையை முன்வைக்கிறார்.இந்தியாவின் அணு மின் நிலைய ஆலைக்கு தேவைப்படுகிற மூல யூரேனியப் பொருட்களின் தட்டுப்பாடு,தொழில்நுட்பத்திற்கு அயல் நாடுகளை சார்ந்துள்ளது,கதிரியக்க கழிவுப் பொருட்களை அகற்றுவதில் சிக்கல்,அதிகரிக்கிற உற்பத்தி செலவுகள்  போன்ற காரணிகளை மேற்கோள் காட்டுகிற கோசம்பி,இந்திய அரசு,அணு மின் நிலையங்கள் நிர்மாணிப்பது வெறும் வறட்டு கௌரவத்திற்கு மட்டும்தான் என்கிறார்.

நீடித்த மேம்பாட்டுக்கான(sustainable Development) மாற்றுக் கொள்கை:

மனித சமூகம் தொடர்ச்சியாக வாழ வேண்டுமென்றால் இயற்கையுடன் இணைந்து இசைந்து வாழவேண்டும்.இயற்கையின் புதைபடிம ஆற்றல் அனைத்தும் வரம்பிற்கு உட்பட்டவையே.திட்டமிடாமல் கட்டற்ற வகையில் காடுகளை அழிப்பதையும் பூமியை அகழ்ந்து நிலக்கரி எடுப்பதும் வரம்பிற்கு உட்படவேண்டும்.அதற்கு அறிவியல் பூர்வமான தொழில் கொள்கை வேண்டும்.

சமூக வளர்ச்சியோடு சூழலியல் கரிசனமும்இணையவேண்டும்.சூழலுக்கு கேடு விளைவிக்காத, சமூகத்தின் நீடித்த மேம்பாட்டிற்கான, இயற்கை வள பயன்பாடு குறித்து சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே கோசம்பி தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார். மனிதன் அதிகமாக நிலக்கரி எடுப்பது, அனல் மின்சார உற்பத்தி ஆலைக்குதான்.ஆனால் அதற்கு பெரிதும் விலை கொடுக்க வேண்டியுள்ளது.இங்கிலாந்தில் அனல் உற்பத்தி நிலையத்தால் நகரத்தில் இரு பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை உயர்ந்ததையும் கரித்தூசி வெளியேற்ற சீர்கேட்டையும் சுட்டிக் காட்டுகிற கோசம்பி,அனல் மின் நிலைய கழிவுகளை விட அணு மின் நிலைய கழிவு மிகவும் அபாயகரமானது என்கிறார்.ஆக அனல் மின் நிலையமும் வேண்டாம் அணு மின் நிலையம் வேண்டாமென்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு மாற்றாக சூரிய ஆற்றலை முன்வைக்கிறார்.

சூரியன் என்ற பொதுவளத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என 1960  களிலியே தொடர்ச்சியாக பல கட்டுரைகளில் வலியுறுத்துகிறார்.எல்லா விஷயத்திலும் இந்தியா,அமெரிக்காவைப் பார்த்தோ ரஷ்யாவைப் பார்த்தோ நகல் எடுப்பதை பகுத்தறிவற்ற செயல் என்கிற கோசம்பி,இந்தியாவில் கிடைக்கிற அளப்பரிய சூரிய ஆற்றல் இந்த நாடுகளுக்கு கிடையாது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

மேலும் “சூரிய ஆற்றலை வலியுறுத்துவதன் முக்கியமான ஆதாயம் மின்னாற்றலைப் பயன்படுத்துவதில் அது கீழ் நோக்கிய பரவலாக்கத்தைச் சாத்தியமாக்குகிறது என்பதுதான்.தற்போதைய நீர் மின்சாரம் மற்றும் அனல் மின்சார வளங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தியா முழுமையும் மின்மயமாக்கும் தேசிய கிரிட் இல்லாமலே கூட உள்ளூரிலேயே உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும்.இந்தியா முழுவதும் பரவியிருக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கும் உள்ளூர் பயன்பாட்டிற்கும் சூரிய மின்சாரமே சிறந்த வகை மின்னாற்றலாகும்” என்கிறார்.டி.டி கோசாம்பியின் இந்த தொலைநோக்குப் பார்வை அபாரமானது.விவசாய பயன்பாட்டிற்கான மின் மோட்டார்களை சூரிய ஆற்றலில் மேற்கொள்ளவேண்டும் எனவும் 5h.p முதல்  10 h.p மோட்டார் வரை விவசாயிகள் எளிமையாக கையாளலாம் என கோசம்பி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை தற்போதுதான் இந்திய அரசு ஹரியானாவிலும், ராஜஸ்தானிலும்,தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த விஷயங்களை அரசு கையிலெடுத்திருந்தால் இயற்கை வளங்களை பாதுகாக்க முடிந்ததோடு கீழ் நோக்கிய பரவலையும் வட்டார ரீதியிலான தொழில் பெருக்கத்தையும் சாத்தியப் படுத்தியிருக்க முடியும்.அரை நூற்றாண்டு காலத்திற்கு பின்பு விழித்துக் கொண்ட இந்திய அரசு தற்போது வேறு வகையில் சூரிய ஆற்றல் மின் உற்பத்தியை முடிக்கிவிட்டுள்ளது.அதானிக்கும் அம்பானிக்கும் பல சலுகைகளை வழங்கி பிரம்மாண்டமான சூரிய ஆற்றல் மின் திட்டங்களை மேற்கொள்ளவைக்கிறது.பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் “பசுமை முதலாளிமையாக” லாபத்தை அபகரித்துக் கொள்கின்றன.

அறிவியல் தொழில்நுட்பம்,பொருளாதாரம் ஆகியவை வறட்டுக் கௌரவப் பிரச்சனையாகவும்,வெளி உலகுக்கு நம்மைச் செழிப்பானவர்களாகக் காட்டிக் காட்டிக் கொள்வதாகவும் சுருக்கப்பட்டு விட்டது.இருந்தாலும்,உத்தரவு போட்டு சூரிய இயக்கத்தை தடுக்க முடியாது என்பதால்,பொதுப் புத்திக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எதிர் காலத்தில் இவை எடுத்துக் கொள்ளப்படலாம்”என்ற டிடி கோசாம்பியின் தீர்க்க தரிசனம் எதார்த்த உணமையாகிவிட்டது.

ஆதாரம்:

வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்- மூ.அப்பணசாமி,வெளியீடு –ஆறாம்திணை.

 நன்றி :ஜனசக்தி