Pages

Friday 19 May 2023

காடழித்து மரம் வளர்ப்போம் -பாஜகவின் புதிய வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம்

 




அதானியின் பங்குச் சந்தை ஊழல் மீதான விசாரணை கோரி,நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிற நிலையில்,சத்தமில்லாமல் இந்திய வனங்களை கார்பரேட்களுக்கு தாரை வார்க்கிற வகையிலே வனப்பாதுகாப்பு சட்டம்(1980)திருத்த வரைவை சுற்றுச்சூழல்,வன மற்றும் காலநிலைமாற்றத் துறை (MoEFCC), அமைச்சர்  பூபேந்தர் யாதவ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

வனப் பாதுகாப்பு சட்டம் 1980 இல் திருத்தம் கொண்டு வருகிற புதிய வனப்பாதுகாப்பு சட்டம் 2023 மசோதாவானது முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷை தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமல்,நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதும் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

புதிய திருத்த வரைவில் வனப் பகுதிகுறித்து நடைமுறையில் உள்ள வரையறையை  மாற்றியமைப்பதால், இனி எந்த வித அனுமதியும் கட்டுப்பாடும் இன்றி லட்சக்கணக்கான ஹெக்டர் காடுகளை வெட்டி தள்ளலாம்.காடு வளர்ப்பு என்ற பெயரில் தனியாருக்கு காட்டுப் பகுதிகளை தாரை வார்க்கலாம்.காட்டு நிலங்கள் இனி காடுகள் சாராத நிலங்களாக மாற்றப்படுவதால்,காடழிப்பு சட்டப்பூர்வ வடிவில் மேற்கொள்ளப்படும்!

புதிய சட்ட வரைவில்” பொருளாதார தேவை” க்காக காட்டின் வளத்தை பயன்படுத்துவது என்ற பொருளிலான வாசகங்கள் வருகிறது.யாரின் பொருளாதார தேவைக்காக காடு பயன்படப்போகிறது என்பதே இங்கு கேள்வி.

புதிய சட்ட வரைவின்படி சர்வதேச எல்லைகளின் இருந்து 100 கிமீ தூரம் வரையிலான வனப் பகுதிகளில் அரசின் பாதுகாப்பு நலனிற்காக எந்த வித அனுமதியும் இல்லாமல்  கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு(தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற வரையறையில்) விலக்கு வழங்கப்படுகிறது.மேலும்,ரயில் மற்றும் சாலை அருகாமை பகுதிகளில் இருந்து 10  ஹெக்டேர் காட்டு நிலங்களுக்கு கட்டுமானம் மேகொள்ள  விலக்கு அளிக்கப்படுகிறது.மேலும் காடுகளில் சுற்றுலா(சபாரி) செல்கிற பகுதிகளும் காடுகள் அல்ல என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படுகிறது.

முன்னதாக டிஎன் கோதவர்மன் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கொன்றின் உச்ச நீதிமன்ற தீர்ப்பில்(1996),காடு என்பதற்கான வரையறையை டிஷ்னரி விளக்கம் கொண்டு அணுகாமல் அரசின் ஆவணங்களின் எங்கெல்லாம் காடுகள் என்றுள்ளதோ அவை அனைத்துமே காடுகள்தான் எனக் கூறியது.அது தனியார் வசமோ அல்லது அரசின் வசமோ காடுகள் என்ற அரசின் ஆவணமே போதுமானது என்றது.

தற்போதைய சட்டத் திருத்தமானது மேற்கூறிய உச்ச நீதிமன்ற வரையறைகளை துடைத்தெறிந்துவிட்டது.மேலும் பழைய வனப் பாதுகாப்பு சட்டங்கள் வழங்கிய குறைந்தபட்ச வன மற்றும் பழங்குடிகள்  பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றுகூட மேற்கோள் காட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் காட்டுப் பகுதிகளை காடுகள் சாராத பகுதிகள் என்று கூறி பெரும் கார்ப்பரேட்களின் வணிக நலன்களுக்கு காட்டுப் பகுதிகளை திருப்பி விடுவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளது.மறுபக்கம் காடழித்து மரம் வளர்ப்போம் என்கிற கதையாக காலநிலை மாற்ற சிக்கலுக்கு தீர்வு காண்பதாக செயற்கையான,போலியான காடு வளர்ப்பு திட்டங்களின் மூலமாக ஓரினப் பயிர்த் தோட்டங்களை வளர்த்து அதைக் காடு எனக் கூறப் போகிறார்கள்.

ஆக,பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை வணிகமயப்படுத்துவதற்கும் வனங்களில் பழங்குடிகளின் உரிமைகளை பறித்து அவர்களை வனங்களை விட்டு வெளியேற்றுவதற்குமே புதிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வருகிறது.

மேலும் இந்த சட்டத் திருத்த வரையறை யாவுமே பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் வெளியிட்டும்,யாருமே பேசாத  சமஸ்கிருதத்தில் வலிந்து சில வார்த்தைகளை சேர்த்தும் தனது மொழித் திணிப்பு கொள்கையை  வெளிப்படுத்தியுள்ளது..

நன்றி -ஜனசக்தி .

 

 

No comments:

Post a Comment